இந்த வலைப்பதிவில் தேடு

மொத்தப் பக்கக்காட்சிகள்

எமது வலைப்பக்கத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்

சனி, 15 ஜூலை, 2017

கல்வி வளர்ச்சி நாள் நிகழ்வுகள் 2017-18




கல்வி வளர்ச்சி நாள் விழா

       இலந்தக்கோட்டை அரசு மேனிலைப் பள்ளியில் இன்று 15/7/2017 பாரதப் பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்பட்டது.   பள்ளியின் மூத்த முதுகலை ஆசிரியர்  திரு.வெ. பாலகிருஷ்ணன் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.  பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி. அ. பீட்டர் அவர்கள் விழாத் தலைமை ஏற்றுத் தலைமையுரை ஆற்றினார். குலக் கல்வி முறையினை அகற்றியதுடன், கல்வியைப் பாமரரும் எளிதில் அடையும் வகையில் கல்விக்கூடங்கள் பல தோற்றுவித்து மதிய உணவு வழங்கிக் கல்வியில் ஒரு பெரும்புரட்சியை நடத்திக் காட்டிய கல்வி வள்ளல் காமராசர் என அவர் எடுத்துரைத்தார்.  பள்ளியின் மூத்த பட்டதாரி ஆசிரியர் திருமதி.ஜெ.காந்திமதி அவர்கள் கல்வி வளர்ச்சி – முழுமை பெற்ற கல்வி வளர்ச்சியை அடைய நாம் மேற்கொள்ள வேண்டிய செயல்கள் என்னென்ன என்பதைப் பட்டியலிட்டுப் பேசினார்.
கல்வி வளர்ச்சி நாள் முன்னிட்டுக் கலை இலக்கியப் போட்டிகள் நடைபெறுகின்றன.



            கல்வி வளர்ச்சி நாளை முன்னிட்டு பள்ளியின் தமிழிலக்கிய மன்றம் சார்பாக  நடத்தப்பட்ட கட்டுரை, பேச்சு மற்றும் ஓவியம் ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கிப் பாராட்டினார். மேலும், இலக்கிய மன்றத்தின் சார்பில் தானே தலைப்பெடுத்துப் பேசுதல், சொற்கோபுரம் அமைத்தல், சொற்சங்கிலி அமைத்தல் முதலான மொழித்திறன் வெளிப்பாடு சார்பான செயல்பாடுகளில் சிறப்பாகச் செயல்பட்ட மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கிப் பாராட்டினார்.

           பள்ளியின் தமிழாசிரியர் திரு.கொ.சுப. கோபிநாத் அவர்கள் காமராசரின் பண்புகள் நமக்குக் கற்றுத்தரும் பாடம் என்னும் தலைப்பில் பேசினார். இந்த விழாவில் மாணவி செல்வி. ச. மகிளாதேவியின் உரைவீச்சு மாணவர்களுக்குத் தூண்டுகோலாக அமைந்தது. காமராசர் பற்றிய  மாணவர் குழுவின் பாடல் காதுகளுக்கும், கலைநிகழ்ச்சிகள் கண்களுக்கும் விருந்தாக அமைந்தன. பள்ளியின் முன்னாள் மாணவர்களின் சிறகுகள் இயக்கத்தின் சார்பில் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.பட்டதாரி ஆசிரியர் திரு.மா. முருகன் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக