கல்வி வளர்ச்சி நாள் நிகழ்வுகள் 2015-2016
இலந்தக்கோட்டை அரசு மேனிலைப்பள்ளியில் 15/7/2015 புதன்கிழமை அன்று பாரதப் பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்பட்டது. இந்த நாளில் மாணவர்களுக்குக் கட்டுரை, பேச்சு மற்றும் ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டன.
பிற்பகலில் கல்வி வளர்ச்சி நாள் விழாவுடன் தமிழ் இலக்கிய மன்றத் தொடக்க விழாவும், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவுமாக முப்பெரும் விழா நடைபெற்றது. இந்த விழாவிற்குப் பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு. அ. வடிவேல் எம்.ஏ.,எம்.எட்.,எம்.பில்., அவர்கள் தலைமை ஏற்றுத் தலைமை உரை ஆற்றினார். பள்ளியின் மூத்த முதுகலை ஆசிரியர் திரு. வெ. பாலகிருஷ்ணன் அவர்கள் முன்னிலை வகித்தார்.
பள்ளியின் தமிழ் ஆசிரியர் திருமதி. இரா.துர்க்காதேவி அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். மாணவர்கள் செல்வன்.இரா.கோகுல், செல்வி.ம.சசி ரேகா ஆகியோர் காமராசரின் கல்விப் பணிகள் குறித்த உரை வீச்சு சிறப்பாக இருந்தது. கல்வி வளர்ச்சி நாள் குறித்த கலை இலக்கியப் போட்டிகளில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களுக்குப் புத்தகங்கள் பரிசுகளாக வழங்கப்பட்டன.
அடுத்து, கரூர் மாவட்டம், புலியூர் செட்டிநாடு பொறியியல் கல்லூரியில் பேராசிரியராகப் பணி புரிந்து வரும் திரு. தி. கோபிநாத் அவர்களின் நண்பர்கள் குழுவினர் ஏழை எளிய மாணவர்களின் உதவிக்காகத் திரட்டிய நிதித் தொகை ருபாய் 6500/- இல் பத்து மாணவர்களுக்குச் சீருடைகளும், முப்பது மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்களும் வழங்கப்பட்டன. மாணவர்களின் மொழித்திறன்களை வளர்ப்பதில் தமிழ் இலக்கிய மன்றம் முக்கியப் பங்கு வகிப்பதையும், மாணவர்கள் கல்வியுடன் நூல்கள் பல வாசித்து இலக்கியச் சுவை உணர்ந்து பண்பாட்டைப் பின்பற்றச் செய்வதையும் குறித்து முதுகலைத் தமிழ் ஆசிரியர் திருமதி.பாரதமணி அவர்கள் எடுத்துரைத்தார். மேலும் அவரே நன்றியுரை ஆற்றினார். பள்ளியின் பட்டதாரி தமிழ் ஆசிரியர் திரு. கொ.சுப. கோபிநாத் அவர்கள் விழாத் தொகுப்புரை ஆற்றி ஒருங்கிணைத்தார்.