இந்த வலைப்பதிவில் தேடு

மொத்தப் பக்கக்காட்சிகள்

எமது வலைப்பக்கத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்

வெள்ளி, 26 செப்டம்பர், 2014

உலக மக்கள்தொகை கணக்கெடுப்பு நாள் – போட்டிகளும் நிகழ்வுகளும்





இன்று 26/09/2014 வெள்ளிக்கிழமை உலக மக்கள்தொகை கணக்கெடுப்பு நாள் நமது இலந்தக்கோட்டை அரசு மேனிலைப்பள்ளியில் நிகழ்த்தப்பட்டது

.  மத்திய அரசால் வழங்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பற்றிய விளக்கப்படங்கள், தொடரட்டைகள் பயன்படுத்தி மாணவர்களுக்கு விளக்கப்பட்டன. மேலும் அரசு அறிவித்துள்ளவாறு மாணவர்களிடையே மக்கள் தொகை தொடர்பான வினாடி வினாப் போட்டி நடத்தப்பட்டது. ஏ, பி, சி எனும் மூன்று குழுவில் சி குழு வெற்றி பெற்றது. அந்த மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

மாற்று எரிசக்தி விழிப்புணர்வு & நீர்வள ஆதாரங்கள் விழிப்புணர்வு நாள்



                            24/09/2014 புதன்கிழமை அன்று இலந்தக்கோட்டை அரசு மேனிலைப் பள்ளியில் மாற்று எரிசக்தி விழிப்புணர்வு பற்றி மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி க.செ. அருள்ஜோதி அவர்கள் தலைமையில் தேசிய பசுமைப்படைப் பொறுப்பாளர் திரு. வ. சௌந்தரராஜன் அவர்கள் மாற்று எரிசக்தி பயன்படுத்துதல், மரபு சாரா எரிபொருள் பயன்பாடு, நீர் வளங்களைப் பாதுகாத்தல், நீர் மேலாண்மை, மழைநீர் சேகரிப்பு பற்றி மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். அன்றைய தினம் மாணவர்களுக்கு மாற்று எரிசக்தி விழிப்புணர்வு பற்றிய ஓவியப் போட்டி நடத்தப்பட்டது. சிறப்பாக ஓவியம் வரைந்த மாணவர் மாவட்ட அளவிலான போட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது

புதன், 24 செப்டம்பர், 2014

உலக ஓசோன் விழிப்புணர்வு நாள் - நிகழ்வுகள்


        

          உலக ஓசோன் விழிப்புணர்வு நாள் – நிகழ்வுகள் 


     திண்டுக்கல் மாவட்டம் இலந்தக்கோட்டை அரசு மேனிலைப் பள்ளியில் 11/9/2014 அன்று உலக ஓசோன் விழிப்புணர்வு நாள்  பள்ளியில் இயங்கி வரும் தேசிய பசுமைப் படை சார்பில் கொண்டாடப்பட்டது. இந்த விழாவைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி. க.செ. அருள்ஜோதி அவர்கள் தலைமையேற்றுத் தொடக்கி வைத்தார். பூமியைக்காக்கும் கவசமான ஓசோன் தற்போது பாதிப்படைந்துள்ள நிலை, அதைக் காக்க நாம் மேற்கொள்ளவேண்டிய செயல்கள், பெறவேண்டிய விழிப்புணர்வு பற்றிப் பள்ளியின் முதுகலைத் தாவரவியல் ஆசிரியரும், பள்ளி  தேசிய பசுமைப் படையின் பொறுப்பாளருமான திரு.வ. சௌந்தரராஜன் உரை நிகழ்த்தினார். மாணவர்களுக்குக் கட்டுரை மற்றும் ஓவியப்போட்டிகள் நடத்திப் பரிசுகள் வழங்கிப் பாராட்டப்பட்டன. மேலும், ஓசோன் விழிப்புணர்வுப் பேரணி நடத்தி முழக்கங்கள் முழங்கப்பட்டன.

புதன், 17 செப்டம்பர், 2014

விளையாட்டுப் போட்டிகளில் சாதனை




      விளையாட்டுப் போட்டிகளில் சாதனை

           திண்டுக்கல் மாவட்டம் இலந்தக்கோட்டை அரசு மேனிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் பல்வேறு விளையாட்டுப்போட்டிகளில் பரிசுகளைப் பெற்றுச் சாதனை புரிந்துள்ளனர். கடந்த மாதம் வேடசந்தூர் குறுவட்ட அளவிலான பாரதியார் நினைவு விளையாட்டுப் போட்டிகள் கோ.இராமநாதபுரம் அரசு மேனிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில் நம் பள்ளி மாணவர்கள் பதினான்கு வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான கபடி போட்டியில் முதல் இடம் பெற்றனர். பதினேழு வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான கபடி போட்டியில் இரண்டாம் இடத்தை எட்டிப் பிடித்தனர்.
 
           இதே குறுவட்ட அளவிலான பதினான்கு மற்றும் பதினேழு மாணவர்களுக்கான பூப்பந்து விளையாட்டில் இரண்டாம் இடத்தைப் பெற்றனர்.  பதினான்கு வயதுக்குட்பட்ட மாணவருக்குரிய உயரம் தாண்டும் போட்டியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர் எ.மணிகண்டன் முதல் பரிசுடன் பதக்கத்தைப் பெற்றான். போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டன. மேலும் இம்மாணவர்கள் திண்டுக்கல் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கத் தேர்வு செய்யப்பட்டனர்.

மாவட்ட சாதனை


       செப்டம்பர்  21,22  அன்று திண்டுக்கல் மாவட்ட அளவிலான பாரதியார் நினைவு விளையாட்டுப் போட்டிகள் காசிபாளையம் அரசு மேனிலைப் பள்ளியில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் நம் பள்ளி மாணவன் எ. மணிகண்டன் பதினான்கு வயதுக்குட்பட்ட மாணவர்க்குரிய உயரம் தாண்டும் போட்டியில் முதல் இடத்தைப் பெற்றான். மேலும் பத்தொன்பது வயதுக்குட்பட்ட மாணவர்களுக்குரிய பூப்பந்து போட்டியில் மாவட்ட
அளவில் முதல் இடம் பெற்றனர்.  பதினான்கு வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான கபடி போட்டியில் இரண்டாம் இடம் பெற்றனர். சிறப்பாக விளையாடி மாவட்ட அளவில் முதல் இடம் பெற்ற மாணவர்கள் அடுத்து நடைபெறும் மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.


           போட்டிகளில் சிறப்பாக விளையாடிப் பள்ளிக்குப் பெருமை சேர்த்த மாணவர்களைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி. க.செ.அருள்ஜோதி அவர்கள் மற்றும்  பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் திரு.ச. பீட்டர் நெல்சன் ராஜ் அவர்கள்  பாராட்டினர்.  மண்டல அளவிலான போட்டிகளில் மாணவர்கள் சிறப்பாகப் பங்கேற்க அனைத்து ஆசிரியர்களும் ஊக்குவித்துப் பாராட்டினர். 

செவ்வாய், 9 செப்டம்பர், 2014

ஆசிரியர் தின விழா நிகழ்வுகள்



ஆசிரியர் தினவிழா நிகழ்வுகள்

          திண்டுக்கல் மாவட்டம் இலந்தக்கோட்டை அரசு மேனிலைப்பள்ளியில் ஆசிரியர் தின விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.  மாணவர்கள் ஆசிரியர்களை இனிப்புகள் வழங்கிப் பள்ளிக்கு வரவேற்றனர்.  மேலும் மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கேக் வெட்டும் நிகழ்வில் பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி. க.செ. அருள்ஜோதி அவர்கள் கேக் வெட்டி இனிப்புகளைப் பகிர்ந்தார்.