இந்த வலைப்பதிவில் தேடு

மொத்தப் பக்கக்காட்சிகள்

எமது வலைப்பக்கத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்

ஞாயிறு, 26 ஜனவரி, 2014

வாக்குரிமை கவிதை - வ.கோவிந்தசாமி

வாக்குரிமை

இந்திய ஜனநாயகத்தின்
இன்றியமையா வாழ்வுரிமை
வாக்குரிமை!
மக்களாட்சியின் மாசற்ற
மகத்தான செல்வம்
வாக்குரிமை!
அடிமை வாழ்வை எண்ணி – அதில்
கொடுமை நிலையெண்ணி
விடுதலை வேட்கையிலே – அன்று
வீரர் பலர் இருந்தனர் – அவர்கள்
நித்தம் நித்தம் தம்
நிலையை எண்ணி – தம்
சித்தம் கலங்கி நின்றார் – அன்று
சிந்தையில் துணிவு கொண்டார். 
யுத்தம் பல புரிந்து
ரத்தம் பலர் சொரிந்து
பெற்றது இந்தக் குடியரசு – அதை
நன்றே பேணும் புவியரசு.
மக்கள் தானென்று
மகான்கள் மனத்தில் கொண்டு
வகுத்துத் தந்ததுவே
வாக்குரிமை!  
நாம் இந்திய நாட்டின்
குடிமகன் என்பதற்கு
ஓர் ஆதாரம் வாக்குரிமை! 
ஏர் பிடிக்கும் விவசாயி
தூறேடுக்கும் தொழிலாளி
வார்  பிடிக்கும் தினக் கூலி 
சேறு எடுக்கும் சிற்றாளும்
ஊராட்சி உறுப்பினராய்
ஊராளும் தலைவராய்
சட்டமன்ற உறுப்பினராய்
சட்டசபை மந்திரியாய் 
பாராளுமன்ற உறுப்பினராய்
பாரதப் பிரதமராய்
ஆவதற்கு அச்சாணியே
வாக்குரிமை! 
வாக்குரிமை இல்லையேல் வாழ்வுரிமை இல்லை! 
வாக்குரிமையே வாழ்வுரிமை! 
வாழ்க ஜனநாயகம்!  வாழ்க வாக்காளர் புகழ்!
                                         --வ.கோவிந்தசாமி,
                   இளநிலை உதவியாளர்,

                   அரசு மேனிலைப் பள்ளி, இலந்தக்கோட்டை.

வெள்ளி, 17 ஜனவரி, 2014

பள்ளியின் ஆண்டறிக்கை 2013-2014

அரசு மேனிலைப் பள்ளி, இலந்தக்கோட்டை,         திண்டுக்கல் மாவட்டம்
ஆண்டறிக்கை 2013-14
           “வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகம்” என்று கூறுகிறது தொல்காப்பியம். இன்று எல்லையளவில் சுருங்கிப் போயிருந்தாலும் புகழில் பீடுநடை போட்டு விளங்குகிறது  நம் தமிழகம். இதன் தென்திசையில் பாண்டிய நாட்டுடன் இருந்து பிற்காலத்தே திப்புச் சுல்தான் ஆட்சி செய்த பகுதி நம் திண்டுக்கல் மாவட்டம்.  மலைக்கோட்டை, சிறுமலை வாழைப்பழம், பூட்டு இவற்றுடன் தற்போது கல்வியிலும் சிறப்புப் பெற்று விளங்குகிறது நம் மாவட்டம்.  திண்டுக்கல் மாவட்டத்தில் தெய்வீக மணம் கமழும் பழனியை மையமாகக் கொண்டு செயல்படும் கல்வி மாவட்டத்தில் அடங்குவது நம் பள்ளி.  முற்காலத்தே இலந்தை மரங்கள் அதிகமாகக் காணப்பட்டதால் இலந்தக்கோட்டை என்று பெயர் பெற்ற இவ்வூரின் இயற்கையான சூழலில் வேம்பு, புன்கு மரங்களின் நீழலில் கலைமகள் மருவும் இடமாக இப்பள்ளி திகழ்கிறது.
          1982-ஆம் ஆண்டு வரை நடுநிலைப் பள்ளியாகச் செயல்பட்ட இப்பள்ளி 1983-இல் பள்ளிக்கல்வித்துறையால் உயர்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டது.  பின், 2001-ஆம் ஆண்டு இப்பள்ளி மேனிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டது.  திண்டுக்கல் மாவட்டத்தின் கடைக் கோடியாக இருப்பதனால் என்னவோ, இப்பள்ளி ஆண்டு தோறும்  புதுப்புது அணிமணிகளை அணிவது போன்றே புதுப்புது ஆசிரியர்களை ஏற்றுப் புதுமையுடனும் புத்துணர்வுடனும் விளங்குகிறது. 
2013-14 ஆம் கல்வியாண்டு:
         சமச்சீர்க் கல்வி கொண்டு வரப்பட்ட பின் பரபரப்பாக நடை பயின்ற இந்தக் கல்வியாண்டில் 31.5.2013 முதல் தலைமையாசிரியராகத் திரு. பா. கதிரேசன் எம்.ஏ., எம்.எட்., அவர்கள் பதவியேற்றார்.  இக்கல்வியாண்டில் மேனிலைக் கல்வி பயிற்றுவிக்க ஆறு முதுகலை ஆசிரியர்களும், இடைநிலைக் கல்வி பயிற்றுவிக்க ஒன்பது பட்டதாரி ஆசிரியர்கள், ஒரு உடற்கல்வி ஆசிரியர்,  மற்றும் பகுதிநேர உடற்கல்வி ஆசிரியர், கலையாசிரியர் எனப் பன்னிரண்டு ஆசிரியர்களும் பணிபுரிகின்றனர். தற்போது அனைவருக்கும் இடைநிலைக்கல்வி இயக்கம் மூலமாக ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு அடிப்படைப் பயிற்சி கற்பிக்க ஒரு ஆசிரியர் நியமிக்கப்பட்டுள்ளார்.  இளநிலை உதவியாளர், துப்புரவாளர் என இரண்டு ஆசிரியர் அல்லாதோர் பணியாளர்களும் உள்ளனர்.
            இப்பள்ளியில் ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையில் மொத்தம் 382 மாணவர்கள் படித்து வருகின்றனர். 6 முதல்  10ஆம் வகுப்பு வரையிலும்  282  மாணவர்கள் உள்ளனர்.  மேனிலைப் பிரிவில் 100   மாணவர்கள் உள்ளனர்.  மேனிலைக் கல்விப் பிரிவில் உயிரி கணிதம், கணினியியல் ஆகிய இரண்டு பிரிவுகள் தமிழ் வழியில் பயிற்றுவிக்கப் படுகின்றன.
தேர்ச்சி நிலை:
          குஜிலியம்பாறை வட்டத்தில் தேர்ச்சி நிலையில் சிறப்புப் பெற்று விளங்கும் இப்பள்ளி கடந்த ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 94%  விழுக்காட்டையும் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில்  81% விழுக்காட்டையும்  பெற்றுள்ளது.  கடந்த ஆண்டு +2 பொதுத்தேர்வில் 1002/1200        மதிப்பெண் பெற்று வி.நளினா  எனும் மாணவி முதலிடத்தையும்,  பத்தாம் வகுப்பில் 465/500     மதிப்பெண் பெற்று தி.கலாவதி எனும் மாணவி முதலிடத்தையும் பெற்றுள்ளனர்.    இப்பள்ளியில் படித்துச்சென்ற மாணவர்கள் இன்று பொறியாளர்களாக, மருத்துவர்களாக,கல்வித்துறையில் உயர் அதிகாரியாக, ஆசிரியர்களாக விளங்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நலத்திட்ட விவரம்:
                    2013-14ஆம் கல்வியாண்டில் தமிழக அரசு வழங்கும் பள்ளிக்கான நலத்திட்டங்கள் அதிவிரைவாகப் பெற்று வழங்கப்பட்டுள்ளன.    விலையில்லாப் பேருந்து பயண அட்டை   மாணவர்களுக்கும், விலையில்லாப் பாட நூல்கள், பாடக் குறிப்பேடுகள் 382   மாணவர்களுக்கும்  +1 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி 58  மாணவர்களுக்கும் +2  மாணவர்களுக்கு மடிக்கணினி    மாணவர்களுக்கும் வழங்கப்பட்டது. விலையில்லா மடிக்கணினி மற்றும், மிதிவண்டிகள்  மாண்புமிகு வேடசந்தூர் சட்ட மன்றத் தொகுதி உறுப்பினர் திரு.எஸ். பழனிச்சாமி அவர்களைச் சிறப்புவிருந்தினராகக் கலந்துகொண்ட விழாவில் வழங்கப்பட்டது. தற்போது பயிலும் +2  மாணவர்கள்   பேருக்கு மடிக்கணினி கேட்டுப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.  பள்ளியில் இடைநிற்றல், தேக்கம் இவற்றை நீக்கத் தமிழக அரசு செயல் படுத்திவரும் உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் பத்தாம் வகுப்பிற்கு 76   மாணவர்கள்,  +2 விற்கு 48  மாணவர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.  ஆதி திராவிட மாணவர்கள் 36  பேருக்குக் கல்வி உதவித் தொகை பரிந்துரைக்கப்பட்டுள்ளது.  இக்கல்வி ஆண்டில் 261   மாணவர்கள் தினசரி சத்துணவு சாப்பிட்டு வருகின்றனர்.
பள்ளியில் பாட இணைச்செயல்பாடுகள்:
                     தேசியக் கலைத்திட்டம்-2005    மாணவர்களுக்குப் படிப்புடன் மதிப்பீட்டுக் கல்வி உள்ளிட்ட பாட இணைச் செயல்பாடுகளுக்கு அதிக முக்கியத்துவம் தரப் பரிந்துரைத்துள்ளது. மேலும், சமச்சீர்க்கல்வியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள முப்பருவமுறைக் கல்வியில் மாணவர்களின் கற்றலுடன் சமூக மதிப்பீடுகளை அறியும் வகையில் நம் பள்ளியில் பல குழுக்கள் செயால்படுகின்றன. அவை,  
    தமிழ் இலக்கிய மன்றம், ஆங்கில இலக்கிய மன்றம்,  கணிதக்கழகம்,  அறிவியல் மன்றம்,  சமூகவியல் மன்றம்,  நுண்கலை மன்றம், தேசிய பசுமைப் படை,  செஞ்சிலுவைச் சங்கம், செஞ்சுருள் சங்கம், சாரணர் இயக்கம்,
என்பன.
      இவற்றில் பள்ளியின் தலைமையாசிரியர் தலைவராகவும், பொறுப்பு ஆசிரியர் உறுப்பினர் செயலராகவும், மாணவர்கள் உறுப்பினர்களாகவும் உள்ளனர்.  ஒவ்வொரு வாரமும் இக்குழுக்கள் ஆலோசனை நல்கி நல்லாளுமையுடன் மாணவர்கள் திகழ வழிகாட்டுகிறது.   வாரந்தோறும் வெள்ளிக் கிழமைகளில் மாணவர் மன்றம் கூட்டப்பட்டு திருவிழா நிகழ்வு போல மாணவர்களின் படைப்பு வெளிப்பாடுகள் வெளிக்கொண்டு வரப்படுகின்றன.
                    தமிழ் இலக்கிய மன்றத்தின் சார்பில் ஒவ்வொரு விழாவின் போதும் கட்டுரை, பேச்சு, ஓவியம் முதலான போட்டிகள் நடத்திப் பரிசுகள் வழங்கப் பட்டுள்ளன. தமிழாசிரியர் திரு.கோபிநாத் அவர்கள் இம்மன்றத்தின் பொறுப்பாளராக இருந்து வழிநடத்தி வருகிறார். தமிழாசிரியர் திருமதி.இரா.துர்கா அவர்கள் மாணவர் மன்றத்தைச் சிறப்பாக நடத்தி வருகிறார்.  ஆங்கில இலக்கிய மன்றத்தில் ஆசிரியர் செல்வி. ஐஸ்வர்யா அவர்கள் மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் உரையாடுவது, தயக்கமின்றிப் பேசுவது போன்ற பயிற்சியை நல்கி வருகிறார். கணிதக் கழகத்தில் ஆசிரியர் திரு. முருகன் அவர்கள் பல்வேறு புதிர்க் கணக்குகளை அறிமுகம் செய்து மாணவர்களின் அறிவைப் பட்டை தீட்டி வருகிறார்.  அறிவியல் மன்றத்தின் சார்பில் ஆசிரியர் திருமதி சகுந்தலா அவர்கள் கடந்த அக்டோபர் மாதம் அறிவியல் கண்காட்சியை சிறப்பாக நடத்தினார்
          பெண்கள் வன்கொடுமை தவிர்க்கும் மன்றம் ஆசிரியர் திருமதி.காந்திமதி அவர்களின் பொறுப்பிலும்,  தகவல் அறியும் உரிமைச்சட்டம் ஆசிரியர் திரு.வீ.முத்துசாமி அவர்களின் பொறுப்பிலும் இயங்கி வருகிறது..  சுற்றுச்சூழல் மன்றம் ஆசிரியர் திரு. முருகேசன் அவர்களால் பசுமையுடன் பராமரிக்கப்பட்டுவருகிறது.
         செஞ்சுருள் மன்றத்தின் சார்பாக ஒன்பது மற்றும் பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு வளரிளம் பருவக் கல்வியை ஆசிரியர் திருமதி. தேன் மலர் விழி மற்றும் திருமதி.இரா.கனகா  அவர்கள் வழங்கி வருகிறார்.  வளரிளம் பருவக் கல்வி சார்பில் வட்ட அளவில் நடத்தப் பட்ட கட்டுரைப் போட்டியில் மாணவி கீர்த்தனா, ஓவியப் போட்டியில் மாணவர் உமா ஷங்கர் ஆகியோர் முதல் இடத்தைப்பெற்றுள்ளனர். 
        தேசிய பசுமைப் படை சார்பாக மாணவர்களுக்குப் பச்சை  வண்ணச் சீருடைகள் வழங்கப்பட்டுள்ளன.  மேலும், பள்ளியில் மரக் கன்றுகள் நடப் பட்டுள்ளன. இந்த அமைப்பின் பொறுப்பாளராக ஆசிரியர் திரு. சௌந்தரராஜன் அவர்கள் சிறப்பாக வழிநடத்துகிறார்.    செஞ்சிலுவைச் சங்கம், சாரணர் இயக்கம் ஆகிய அமைப்புகள் ஆசிரியர்கள் திரு.சுப்பிரமணியன் மற்றும் ஆசிரியர் செல்வி. விஜயப் பிரியா ஆகியோரைப் பொறுப்பு ஆசிரியர்களாகக் கொண்டு செயல்படுகின்றன.  உள்ளூரில் கோவில் திருவிழாவில் மாணவர் ஒழுங்கு குழு செயல்பட்டது. மேலும், டெங்கு, பாலித்தின் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பேரணியிலும் கலந்து கொண்டனர். 
முக்கியமான நிகழ்வுகள்:
            பள்ளியில் ஜூன் மாதம் பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டம் நடைபெற்றது.  இதில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்புப் பயிலும் மாணவர்களின் அனைத்துப் பெற்றோர்களும் திரளாகக் கலந்து கொண்டனர்.  தேர்வில் நூற்றுக்கு நூறு விழுக்காடு பெறுவது, பள்ளியில் ஒழுங்கு நடைமுறை,  வீட்டில் பெற்றோர் தம் குழந்தைகளிடம் நடந்து கொள்ளும் முறை குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.   அடுத்து ஜூலை பதினைந்தாம் நாள் பெருந்தலைவர் காமராசர் பிறந்தநாள் கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்பட்டது.  பல்வேறு போட்டிகள் நடத்திப் பரிசுகள் வழங்கப்பட்டன.  
           சுதந்திர நாள் விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.  ஊரில் உள்ள பல்வேறு நற்பணி மன்றத்தினர் சார்பில் ரூபாய் இருபதாயிரம் செலவில் பல்வேறு பரிசுகள் மாணவர்களுக்கு வழங்கிச் சிறப்பிக்கப் பட்டனர்.  அன்று பள்ளி மேலாண்மைக் குழு, பள்ளி மேலாண்மை வளர்ச்சிக் குழு கூடி பள்ளியின் வளர்ச்சித்திட்டங்கள் குறித்து முக்கிய முடிவெடுத்தனர்.
                         இதனைத் தொடர்ந்து நம் பள்ளித் தலைமையாசிரியரின் முயற்சியாலும்  ஊர்ப் பொது மக்களின் ஒத்துழைப்பாலும் பள்ளிக்குத் தேவையான உபகரணங்கள் திரட்டத் திட்டமிடப்பட்டன.  அவ்வகையில் இலந்தக்கோட்டை  மாணிக்கபுரம் கருப்பசாமி அவர்களின் கருணையால் நிதி திரட்டப் பட்டு பள்ளி அலுவலக உதவிக்குத் துணை புரியும் வகையில் ஜெராக்ஸ் மற்றும் அச்சிடும் கருவி வழங்கப்பட்டுள்ளது. 
         இலந்தக்கோட்டை ஊராட்சி மன்றத்தலைவர் திரு. ஆ. மோகன் அவர்களின் முயற்சியால் பள்ளி வகுப்பறைக்குத் தேவையான எட்டு இரும்பு மேஜைகள் பெறப்பட்டுள்ளன.
          குழந்தைகள் தினத்தை நம் பள்ளியில் சிறப்பாகக் கொண்டாடும் பொருட்டு அனைத்து ஆசிரியர்களின் பங்களிப்புத் தொகையில் ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு முடிய பயிலும் 382 மாணவர்களுக்கும் பேனாக்கள் பரிசுப் பொருட்களாக வழங்கப்பட்டுள்ளன.

பள்ளிக்கான புதிய வலைப் பக்கம் :
                 நவம்பர் 14 அன்று நம் பள்ளிக்கேனப் புதியதோர் வலைப் பக்கம்  உருவாக்கப்பட்டுள்ளளது.  திண்டுக்கல் மாவட்டப் பள்ளிகளிலேயே இது புது முயற்சி ஆகும்.  www.landhakottaighss.blogspot.in   எனும் வலை முகவரியுடன்,  நிஜத்தின் நிழல்களைக் காட்சிப்படுத்தும் கல்விச்சாளரமாய் இது வலம்வந்து கொண்டிருக்கிறது.  இதில் நம் பள்ளியின் முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புகள்,  மாணவர்களின் படைப்புகள்,  ஆசிரியர்களின் சாதனைகள்,  ஆசிரியர்களின் கட்டுரைகள்,  மாணவர்களின் கற்றல் பகுதிகள் என  இதுவரை இருபத்தைந்து இடுகைகள் வெளியிடப்பட்டுள்ளன.   1100க்கும் அதிகமான பக்கப் பார்வைகளை நம் பள்ளிக்கான வலைப்பக்கம் கடந்துள்ளது.  இவ்வலைப்பக்க உருவாக்கத்தில் நம் பள்ளியின் கணினி ஆசிரியர் திருமதி. இல.கோகிலா, மற்றும் தமிழாசிரியர் திரு. கே.எஸ்.கோபிநாத் ஆகியோர் சிறப்பாகப் பங்கேற்று அதனைப் புதுப்பித்து வருகின்றனர்.
சிறப்பு வகுப்புகள் :
               மாணவர்களின் கல்வித்தேர்ச்சியை அதிகப்படுத்தும் வகையில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.   தினந்தோறும் காலை மற்றும் மாலை நேரச் சிறப்பு வகுப்புகள் பாட வாரியாக நடத்தப்படுகின்றன.  விடுமுறைக் காலங்களிலும் இவ்வகுப்புகள் தடையின்றி மாணவர் நலன் கருதித் தொடர்ந்து நடத்தப்பட்டுள்ளன.

               2013-14 ஆம் கல்வியாண்டு இலந்தக்கோட்டை அரசு மேனிலைப் பள்ளி கல்வியில் பல சாதனைகளைக் காணஉள்ளது.   கல்வி அழகும், கலை அழகும் பாரம்பரியமும் கொண்ட இப்பள்ளி வரவிருக்கும் அரசுப் பொதுத்தேர்வுகளில் நூற்றுக்கு நூறு விழுக்காடு வெற்றி பெற்றிடும் நோக்கில் தலைமையாசிரியர் திரு. பா. கதிரேசன் அவர்களின் வழிகாட்டலுடன் அனைத்து ஆசிரியர்களும் சிறப்புறச் செயல்பட்டு வருகின்றனர்.

வியாழன், 9 ஜனவரி, 2014

பள்ளியின் முப்பெரும் விழா 2013-14




அரசு மேனிலைப் பள்ளி, இலந்தக்கோட்டை,திண்டுக்கல்மாவட்டம்.
முப்பெரும் விழா – ஜனவரி 2014
( இலக்கியமன்ற நிறைவு விழா, விளையாட்டு விழா மற்றும் ஆண்டு விழா )
இடம்: அரசு மேனிலைப் பள்ளி, இலந்தக்கோட்டை                    நாள்: 10/01/2014
                                         நிகழ்ச்சி நிரல்
தமிழ்த்தாய் வாழ்த்து :     மாணவர்கள்
வரவேற்புரை:             திரு. வீ. முத்துசாமி அவர்கள் உதவித் தலைமையாசிரியர்.
ஆண்டறிக்கை வாசித்தல்: திருமதி. இரா. துர்க்கா தேவி,  தமிழாசிரியர்
தலைமை    :            திரு. பா.கதிரேசன் அவர்கள், தலைமையாசிரியர்
முன்னிலை  :              திரு. ஆ.மோகன் அவர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்
சிறப்பு விருந்தினர்கள்:   திருமிகு. பா. சுகுமார் தேவதாஸ் அவர்கள்,
                            முதன்மைக் கல்வி அலுவலர், திண்டுக்கல்.
                                  திருமதி. எஸ். கலையரசி அவர்கள்,
                              மாவட்டக் கல்வி அலுவலர், பழனி.
வாழ்த்துரை  :            திரு. வெங்கட்ராமன் அவர்கள், பெ.ஆ.க. தலைவர்
                                       திரு. திருவேங்கடம் அவர்கள் கிராமக்கல்விக்குழுத் தலைவர்
                                       திரு.நம்பெருமாள் அவர்கள், கட்டடக் குழுத் தலைவர்
                          திரு.சுப. ரெங்கசாமி அவர்கள், முன்னாள் பெ.ஆ.க.தலைவர்
                          திரு.என்.சீத்தா ராமன் அவர்கள், ஊரார்.
                          திரு. இராமமூர்த்தி அவர்கள், பெ.ஆ.க. பொருளாளர்
                          திருமதி.வி. ஆண்டாள், SMDC உறுப்பினர்  
                          திரு.இ, சம்பத் அவர்கள்,SMDC உறுப்பினர் &  ஆசிரியர்கள்
பரிசளிப்பு நிகழ்வு                          கலை  நிகழ்ச்சிகள்
நன்றியுரை   :         திரு. து. முருகேசன் அவர்கள், உடற்கல்வி ஆசிரியர்
விழாத் தொகுப்புரை:   திரு.கொ.சுப.கோபிநாத் அவர்கள், தமிழாசிரியர்
நாட்டுப்பண் :          மாணவர்கள் 
                  ­­­